Wednesday, May 23, 2012

அரை நிர்வாணமாக்கப்பட்ட கதவு

இது யாரிடமும் தன்னைப் பற்றிச் சொல்வதில்லை

உள்ளும் புறமும் தாழிட்டுக் கொள்ளும்

தன் சுயம் அறிந்திருக்காது

தருணங்களுக்கேற்று திறந்து கொள்ளும்

எப்பொழுதும் ஏதும் தெரிந்திருக்காது

மேதாவிலாச பாவனையுடன் அசைந்து கொண்டிருக்கும்

சில சமயம் தடுப்புகளுக்குள் தன்னை அகப்படுத்தும்

வருவோர் போவோரை எப்போதும் நோட்டமிடும்

செல்லரித்துக் கொள்வதை கண்டுகொள்ளாது

ஒப்பனைகளுக்கு பஞ்சமிருக்காது

ரகசியங்கள் ஏதும் அனுமதிக்காமல்

தனக்கேற்ற சாயங்களை பூசிக்கொள்ளும் ....

இன்னும் சொல்வதென்றால்

உணரவற்ற பொழுதுகளில்

நிர்வாணமாகப்படுவது கதவுகள் மட்டுமல்ல ....