Monday, March 28, 2011

ஹைக்கூ

தூரல் பனி ...

கண்மணியாள் ...

மற்றும் முற்றத்து நிலா...

மன்னிக்கவும் அஃது அழகிப் போட்டியன்று !!!!

Friday, March 25, 2011

மாற்றுத் திறனாளி

எட்டுத் திக்கும் இலவசம் !!!!!

கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும்

கருக்குழாய் குழந்தைகள்

நடப்பில் உள்ளது

அடுத்த காலத்தில்

'அந்த' வேலையும் மிச்சப்படும் ..

தொட்டதெல்லாம் தள்ளுபடி ..!!!

தொலைத்த சில வகைகள் விற்பனைக்கு உள்ளன ..

பேரம் பேசிப் பார்க்கலாம்

நல்ல விலை படியும் ...

நல்லவேளை !!

என்னவன் இன்னும் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறான்

மதுக்கடை இன்னும் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது

பிச்சை கேட்பவன்

நல்லவனாகவே மதிக்கப் படட்டும் !!!

ஒரு திருத்தம் !

சத்தியமாக நான் சொல்வது நீங்கள் நினைப்பதல்ல

என்னவன் ஒரு மாற்றுத் திறனாளி

அவ்வளவுதான் .!

இன்னும் குறிப்புரை தேவையோ ???

தெளியச்சொல்கிறேன்

என்னவன் பெயர் இளைஞன் ..

வெட்கம் என்னையும் காரி உமிழ்கிறது ..

கையறு வாழ்க்கையிது ...

துடைத்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறேன்

மதுக்கடை ....

இன்னமும் பல்லிளித்துக் கொண்டு தான் இருக்கிறது ..!!!!

பதிவிறக்கக் கனவு

அப்படி ஒன்றும் பெரிதான கனவில்லை...!!!

ஒரு கவளச் சோறாகினும் ஊர் கூடும் பந்தி ...


ஒரு வருடப் பிரிவாகினும் ஒரு நாள் தேரோட்டம் ...


சற்று தாமதம் ...இருக்கட்டும் அந்த மாட்டு வண்டி பயணம் ..


ஆட மறந்து விட்டாலும் ...பொக்கிஷம் கிட்டுப் புல் கட்டை ...


வார்த்தை புரியாது ..இருந்தாலும் கேட்க வேண்டும் கிழவியின் கதைகள் ..


இன்னும் அறுந்துவிட வில்லை ..ஆட மனமில்லாத புளிய மர ஊஞ்சல் ...


அடுத்த வண்டி பார்த்தே கற்றுக் கொண்ட அந்த மணிக் கணக்குகள்...


ஒரு ரூபாய்க்கு கை நிறைய கிடைக்கும் கற்பூர மிட்டாய் ..


பட்டாளத்து பயணம் முடிந்து வரும் அப்பாவை பார்ப்பது ...


பெட்டி நிரைய நிரப்பிக்கொள்ளும் கரும்பலகை பலப்பம் ...


இப்படி சிதறிப் போன வாழ்க்கை மட்டும் போதும்.....


எந்த முக நூலிலோ ....அல்லது வலைதளத்திலோ இருந்தால் சொல்லுங்கள் ..


அடுத்த தலைமுறைக்குச் சொல்லி தருவதற்குள் செத்தே போய்விடும்


இந்த பதிவிறக்கக் கனவுகள் .... !!!!

Thursday, March 24, 2011

குளக்கரை மணலிலும் ...

சாரல் மழையிலும்...

அறிமுகமில்லாத மௌனத்திலும் ..

உன் விரல் பிடித்து நடப்பதில் ..

கொள்ளை பிரியம் எனக்கு !!!

Friday, March 11, 2011

"....."

இன்னுமொரு கற்பழிப்பு

பட்டறைகளுக்காக கருவறுக்கப்பட்டது

பக்கத்து நில தென்னந்தோப்பு !!!

இயல்பின் திரியாமை

பின்னிருக்கைக்கான

ஜன்னலோரப் பயணத்தில்

கவிதைகள் வரையப்பட்டிருந்தன

அவன் பெயர்...

அம்பு தைக்கப்பட்ட இதயம்...

மற்றுமதன் கீழாக அவள் பெயர் ....

அம்பின் கூர் நுனியில்

ரத்தம் அல்லது கண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது ...

தியாகம் அல்லது தோல்வி ...

எதுவாகவும் இருக்கலாம் அந்த அடையாளம்.

பச்சை ,சிவப்பு ,அல்லது நீலம்

அது வரைந்தவனின் கையிருப்பைப் பொறுத்தது..

இன்னும் கண்கள் மேயப்படுதலில் சிக்கியது ...

அவர்களுக்கே உண்டான அந்த அதிசயப்பட்டங்கள் ..

குழுமங்கள் இன்ன பிற இத்தியாதிகள் ...

எது எப்படியோ ........!!!!

வெப்பத்தின் எச்சங்கள் சிதறிய அப்பொழுது

எவரது ரசித்தலுக்கும் பணயப்படவில்லை

பயணம் மட்டும் தொடர்ந்து கொண்டே ....

ஒரு வேளை அடுத்த சந்திப்பில் எனக்கானவள் காத்திருக்கலாம்

நானும் அவசரமாக வாங்கிக் கொண்டேன்

அந்த பச்சை ,சிவப்பு, அல்லது நீல நிற மை பேனா !!

Wednesday, March 2, 2011

பெண்ணியமென்னும் உயர்திணை

சின்னதாய் புன்னகைத்து

சித்திரமாய் நடை பழகி

மழலைக் கவி சொல்லி

செல்லமாய்க் கைப் பிடிப்பாள்

கொஞ்சு மொழி பேசும் பேதையெனும் பெண்ணொருத்தி.


இன்னுமொரு காலத்தில்

சொப்புக் கலனேடுத்து

பொய்ச்சோ று ஆக்குவித்து

ஊர் கூடப் பந்தி வைப்பாள்

பேதை வயதடுத்த பெதும்பையெனும் பெண்ணொருத்தி.


சில திங்கள் நாள் கழித்து

வசந்தம் வருகுதனில்

வாடை கால் வருடி

வெண்முல்லைப் பனிமொட்டு

நித்தம் மலர்வது போல்

நாணம் துளிர் கொள்ள

பூவையென மலர்ந்திடுவாள் மங்கையெனும் பெண்ணொருத்தி.


காலம் கரைவதனில்

வண்டின் இனம் கண்டு

முல்லை தேன் சொரியும்

இன்னும் சொல்வது கேள் !


செந்தமிழ் வரியனைத்தும் மௌனித்த மொழியாகும் ;

கூர்விஷப் பார்வைதனில் கூற்றுவன் குடிகொள்ளும் ;

காதலுரைத்திடுவாள் சற்றே காமமுமுரைத்திடுவாள்;

கம்பன் கவி தொட்டு காப்பியமாயணி செய்வாள் ;

பாலை நிலம் காணும் புது மழை பெய்யலவள் மடந்தையெனும் பெண்ணொருத்தி


திங்கள் ஈரைந்தும் இன்முகமாய்க் கணக்கெடுப்பாள் ;

தீச்சுடராயினும் தீண்டுதலில் மனமுறைவாள்;

சாத்திரம் கலந்து கொஞ்சம் ரௌத்திரமும் ஊட்டுவிப்பாள் ;

அன்னையெனப் பெயர் கொள்வாள் அறிவையெனும் பெண்ணொருத்தி.


மீதிரண்டு பருவமுண்டு ..

தெரிவையென வொன்றும்..

பேரிளம் பெண் என வொன்றும்..

தேரான் தெளிவு தீரா இடும்பதனால்

தீர்க்கச் சொல்வேன் !!

உலகத்தினின்ற உயர்திணை ..

"பெண்ணியம்" என்று !!!

அறியாமை

அநேகமானவர்களுக்கும்

அவள் அறிமுகப்பட்டிருப்பாள்...

சிகப்பு ரோஜா

காதல் சின்னமாமே ...?!

Tuesday, March 1, 2011

அடுத்த கட்டம்

துன்பம் மறத்தலுக்கான

இரண்டாம் பிரதியை

என் அப்பாவுக்கு கொடுக்க வேண்டும் ..

முதல் பிரதி ?!

எனக்கு முன்னமே கிடைத்து விட்டது

இனி சுமப்பது தான் பாக்கி !

தேர்வு எண் :இருபத்து நான்கு

தேர்வு எண் :
" இப்போதைக்கு இருபத்து நான்கு"

தேர்வின் பெயர்:
"தகப்பன் சாமி"

தேர்வர் :
"நான்"

"தியாகம்"
சிறுகுறிப்பு வரைக
"அப்பா ! "

அருஞ்சொற்பொருள் தருக
"வறுமை மற்றும் துன்பம் :"
தெரியாது
அப்பா சொன்னதாய் விவரமில்லை

நிரப்புக :
"--------------" ஒரு வாழ்வியல் பாடம்
கோடுகள் கொடுத்து வைத்தவை !
அப்பாவை சுமக்கப் போகின்றன ..

கட்டுரை வரைக :
"உழைப்பு"
மன்னிக்கவும் !
அப்பாவின் செருப்புக்கு எழுதத் தெரியாது ...!

பின் குறிப்பு:
தேர்வு எண்
மறு பரிசீலனைக்குட்பட்டது !!!

இன்பம் தொலைதல்

"வா ....போ ...."

என்ற உரிமையான வார்த்தைகளும்

சற்று கனத்து தான் போகிறது !

சில ஆண்டுக்கான பிரிதலிலும்

மரியாதை நிமித்தமான உரையாடலிலும் !!

காதல் சண்டாளன்

பரிமாணங்கள் வித்தியாசப்படுதலில்

முதலாவதாகத் தோன்றுவதெல்லாம்

கிறுக்கல்கள் தான் போலும் ....!!


அன்றும் அப்படிதான்

எனக்கும் பேனாவிற்கும்

மூன்றாம் உலகப்போர் ..!

என் சிந்தனைகள் எதுவுமே பிடிக்கவில்லையாம் !


வெற்றி தோல்விகள் நிர்ணயித்தலின்

உச்சஸ்தாணியில் வெற்றியெனக்கு...!

வேறென்ன ?!

கருவாக்கம் அவளைப்பற்றியது தான் !


வில்லொத்த புருவமென்றோ ...

நிலவொத்த பளிங்கு முகமென்றோ...

மைகவ்வும் கண்களென்றோ...

கால்தடப் பதிவுகள் கவிதையென்றோ...

வழக்கமாக வர்ணித்திருந்தால்

எக்காளமாய்ச் சிரித்திருக்கும் என் பேனா !


காதலும் காமமும் கலவி நுகர்ந்து ...

விடியலுக்கான வெட்கச் சிவத்தலில்...

நாணம் அதுவென்றும் நளினம் இதுவென்றும்

சில இரட்டிப்பு மொழிகளை

சிந்தையில் உறவாடி பிறகு சொன்னேன்

அவள் பெண்ணியம் அப்படியென்று !

சண்டாளன் !!!!

இப்போது என் பேனாவுக்கும் மோகத்தீ மூண்டு விட்டதாம் ?!!

"....."

அன்று மட்டும்

வார்த்தைகள்

சற்று அசௌகரியப்பட்டிருந்தன

"......முதலிரவு !!!!"